




யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.
2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.
பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.